கபில தேவர்
இயற்றிய
இன்னா நாற்பது
(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)
நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.
கடவுள் வாழ்த்து
முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.
இன்னா - துன்பம்
ஒழுகு - நடத்தல்
முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.
நூல்
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின். 1
பந்தம் - சுற்றம்
வனப்பு - அழகு
சுற்றமில்லாத இல்வாழ்க்கையான் அழகு துன்பமாம். தந்தையில்லாத புதல்வனின் அழகு துன்பமாம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாம்.
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2
இல் - மனையில்
புகல் - நுழைதல்
பார்ப்பாருடைய வீட்டில் நாயும் கோழியும் இருத்தல் துன்பமாம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
நெடுநீர் - கடல்
கடுமொழி - வன்சொல்
கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். 4
புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்
எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.
சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை. 5
ஓம்பல் - பாதுகாத்தல்
வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6
மறம் - வீரம்
கொடை - ஈகை
அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும் துன்பமாகும்.
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை. 7
உரை - சொல்
தேற்றம் - தெளிவு
வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு. 8
நகை - சிரித்தல்
நெஞ்சத்தார் - மனமுடையார்
ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.